அண்ணாத்த ஆடுறார்…

திந்தாக்கு தகிட திந்தாக்கு தகிட என்று குதித்துக் கும்மாளம் போடுகிறார் அண்ணாத்த, நமக்கும் உள்ளே துள்ளுகிறது, அமைதியாய் அமர்ந்து பார்க்கிறோம். வயது ஒரு பொருட்டில்லை, சொல்லப்போனால் அது நமக்குக் கொஞ்சம் கவலையளிக்கிறது. உள்ளார எப்போதும் உல்லாலா உல்லாலா என்று அவர் தொடர்ந்து பாடி ஆடி நம்மை மகிழ்விக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவருக்கும் அந்த ஆசை இருக்கிறது என்பதை அவர் அண்ணாத்த கடைசிநாள் படப்பிடிப்பின்போது சொல்லியிருக்கிறார். உடல்நலப் பிரச்சினைகள் எதுவுமில்லையென்றால் அவரது கதாநாயகிகள் பட்டியலில் இன்னும் இரண்டுமூன்றுபேர் இடம்பெறக்கூடும். எப்படி இது சாத்தியமாகிறது என்று கொஞ்சம் யோசித்தால், இது இன்று நேற்றல்ல 40 வருட உழைப்பினால் கிடைத்த அன்பு, அங்கீகாரம், காதல். இன்றைக்கு 70 வயதுடையவர்கள் ரசிக்கிறார்கள், அது சம வயது என்பதால் இருக்கலாம், குழந்தைகள் / இளம்பெண்கள் ரசிப்பதற்கு என்ன ஃபார்முலா வைத்திருக்கிறார் என்பதுதான் புரியாத புதிர். அவரோடு கதாநாயகியாக நடித்து தற்போது வில்லியாக நடித்திருக்கும் குஷ்பு’ தனது மகள் அவரின் தீவிர விசிறி என்று சொல்லியிருப்பது ஒரு உதாரணம். தாதாசாகிப் பால்கே’ அவார்டு வாங்கிய கையோடு மகள் ஐஸ்வர்யா உருவாக்கியுள்ள ஹூட்’ செயலியை வெளியிட்டிருக்கிறார். அடுத்த படத்திற்காக தேசிங்கு பெரியசாமி இவரது அழைப்பிற்காகக் காத்திருக்கிறார். இதே மேடையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இவருடைய மருமகன் தனுஷ் பெற்றார் என்பது ஒரு ஆச்சர்ய ஒற்றுமை. அண்ணாத்த’ கொரோனா காரணமாக மிகவும் தாமதமாகவே வருகிறார். அதே தேதியில் தங்களது படங்களையும் வெளியிட விரும்பி தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று பின்வாங்குகிறார்கள், விஷாலும், சிம்புவும். படத்தின் டீசர், விஸ்வாசத்தைக் காப்பி செய்வதாக சிவா’வை நோக்கி குற்றச்சாட்டுகள் குவிகின்றபோதிலும், ரசிகர்கள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, கொண்டாடித் தள்ளுகிறார்கள். முதல் காட்சி முடிந்து வெளியே வருகிற ரசிகனிடமிருக்கிறது, வெற்றி/தோல்விக்கான ரகசியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!